Wednesday, December 16, 2015

பெண் துகள்கள்

உருவெடுக்க யோசித்து இரத்த ரணங்களாகவே யோனிவழி வெளியேறக் காத்திருந்த அந்தப் பிண்டம், ஏதோ அனிச்சையாய் கடந்து சென்ற கால் நாழிகைச் சிந்தனையின் பயணாக, இந்த ஆறடி மரங்கள் வாழும் கோளத்தில் கதறியபடி பிராணவாயுவை சுவாசித்தது.

சனியனுக்குக் காதுக்கு இரண்டு, மூக்குக்கு ஒன்னு, காலுக்கு இரண்டு, கைக்கு இரண்டு இன்னும் என்னன்னா மாதிரி, தங்கமா என்ன உருக்கக் காத்திருக்கோ இது. அப்பனின் கரிச்சலுக்கெல்லாம் செவிச்சாய்ந்தாலும் உள்ளுர ஏதும் எடுத்துக்கொள்ளாமல் காற்றில் கோலமிட்டுத் திரிகிறாள்.

ஓரடி இரண்டடி மூன்றடி நான்கடி ஐந்தடி வளருவதற்குள் ஐயாயிரம் கட்டுபாடுகள் விதித்துத் தகர்க்கப்பட்டிருக்கும். பருவம் வந்தவுடன் மீண்டும் விதிக்கப்பட்டிருக்கும். பூத்தப்பின் சுதந்திர வானில் எத்தனிக்க முயலும்போது பல மூடர்க்கூடங்கள் தனக்கான சிலந்தி வலைகளுடன் இரைக்காகப் பொழுதோட்டிக் காத்திருக்கும்.

அனைத்தும் கடந்து மனுஷியாகி உலாவுகையில், தெருவில் திரியும் மானுடர் அவரவற்குப் பிடித்தார் போல் உருவாக்கிய உருவங்களுக்குத் தானறியாமலே பிம்பமாகிறாள். குழந்தைகளுக்கு அக்காவாக, தாத்தாவிற்குத் தான் இளமையில் தவறவிட்ட காதலியாக, இளசுகளுக்குத் தேவதையாக, காமர்களுக்குத் தான் ஏறிப் பயணிக்கும் வாகனமாக. இவ்வாறாக அனுபவிக்கப்பட்ட பிம்பங்களை உடைத்து அவளாக நடக்கும் இப்பெண்களின் துகள்கள் அணுவெங்கும் பரவிக்கிடக்கிறது.

Monday, December 14, 2015

அம்மா

அம்மாவின் ஆகப்பெரும் ஏக்கங்களில் ஒன்று பேருந்தில் ஏறிய பிள்ளைக்கு இருக்கை கிடைத்ததா என்பது.

நான் மறந்த விசயங்களுள் அம்மா திருப்பி போடச் சொன்ன தோசையும் ஒன்று.

இளஞ்சூட்டோட நல்லெண்ணெய அம்மா உச்சந்தலைல தேய்க்கும் போது வருமே ஒரு சுகம்!

மூனு துணி துவைச்சதுக்கே வாயில நுரை தள்ளுதே, அம்மா லாம் வேற லெவல் தெய்வம்

உறங்கிக்கிடக்கும் உணர்வுகளை தட்டி எழுப்புவதில் அம்மா போடும் மிக்ஸிக்கு முதல் இடம்.

குழந்தை பெற்றும் என்றும் குழந்தையாகவே வாழும் ஜீவனுக்கு பெயர்தான் அம்மா.

வளர வளர தான் தெரிந்தது என் தோழி ஆயுள் முழுவதும் என்னுடனே வாழ்ந்திருக்கிறாள்!  

அம்மா/தங்கை/மனைவி யை வண்டியின் பின் அமர்த்திச் செல்லும் போது ஏற்படும் விபத்தில் தோன்றுவது தான் உண்மையான குற்ற உணர்வு.

 கண்டிப்பாக அவளுக்கு ஒரு ஆசை, விருப்பம், ஏக்கம் இருக்கும். கேட்டால் சொல்ல மாட்டா. விடாம கேளுங்க, தினமும் கேளுங்க. நிறைவேற்றுங்க  

ஆடம்பர வீடு தேவை இல்லை, சிறு வயதில் என் வீடாக இருந்த உன் சேலை போதும்  

அலாரம் வைத்தாலும் எழ மாட்டோம் என தெரிந்து இறைவன் படைத்த ஜீவன் அம்மா.

அம்மா வழியனுப்ப வேலைக்கு செல்வோர் பாக்கியசாலிகள்.

இவர்தான் அப்பா என உனக்கு அம்மா அறிமுகப்படுத்தும் வரையில் அவரும் அன்னியனே.

அதிக வலியெடுகின்ற போது "அம்மா" என்று கத்தி விடுகின்றது அனாதை குழந்தை.

Monday, December 7, 2015

மழை! வெள்ளம்! மக்கள்! உணவு! அரசியல்! #‎Cuddaloreflood‬ ‪#‎ChennaiFloods‬

மழை! வெள்ளம்! மக்கள்! உணவு! அரசியல்!
‪#‎Cuddaloreflood‬ ‪#‎ChennaiFloods‬
மழை என்றுமே வரம்தான், கடல் கொந்தளிப்பு சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் மட்டுமே இன்னல்கள் உண்டாக்கி அழிவை ஏற்படுத்தும் நிகழ்வுகள். அவைகூட ஏற்படுவதற்கு சில நாட்கள்/வாரங்கள் முன்பாகவே பொது அறிவிப்பு விடப்பட்டு அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுவர்.
ஆனால் இந்த மழைக்கு ஏன் இவ்வளவு சேதாரங்கள்? 100 வருடங்களில் இல்லாத மழை தான், ஆனால் சேதாரங்கள் ஏற்படுத்தும் மழையல்ல. நாம் போடும் கழிவுகள், நெகிழி, குப்பை போன்றவைகளால் ஏற்படும் குழாய் அடைப்புகள் மற்றும் முறையான வடிகால் அமைக்காத அரசு ....................... சரி அரசியல்ன்னு சொல்லுவாங்க.
மழை பெய்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றவுடன் எதுவும் யோசிக்காமல் உடனிருந்தவர்கள் உதவியுடன் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது. ஆனால் முதலில் ஏற்கனவே களப்பணியில் ஈடுப்பட்டுள்ளவர்களுக்கு முதலில் உதவலாம் என்று எண்ணி என்னால் இயன்ற பணவுதவியை அனுப்பிவைத்தேன்.
பாலசுப்ரமணியம் தர்மலிங்கம் Balasubramani Dharmalingam மற்றும் வாசுதேவன் பச்சிக்கன் Vasudevan Pachikkan - இவர்கள் ஏற்கனவே தனக்கான குழுவை தனித்தனியே அமைத்து சென்னையை நெருங்கியிருந்தனர்.
பிறகு என் நண்பர்களிடம் உதவி கோரினேன். கேட்டவுடன் முன்வந்து பணவுதவி அளித்த பின்வரும் உள்ளங்கள்
1. ஜனார்த்தனன் Jana Nanju
2. ஹரிஷ் பிரபு Harish Prabu
3. அப்துல் சம்சுதீன் Rasheed Bin Samsudeen
4. நரேஷ் Naresh தன்னுடைய பங்களிப்போடு தன்னுடைய பங்களிப்பையும் அனுப்பியிருந்தார்.

தங்களால் முடிந்த பணவுதவியை அனுப்பிவைத்தனர். இதுவரை சேர்ந்த தொகைக்கு பொருட்களை வாங்கிக்கொண்டு சென்னைக்கு செல்லலாம் என்று நினைக்கையில், சென்னைக்கு போதுமான அளவுக்கு நிவாரண பொருட்கள் உள்ளது கடலூர் தான் சென்னையை விட அதிக பாதிப்புக்குள்ளானது என தகவல் வந்தது.
அதற்குள் அலுவலகத்தில் பேசி நிதி திரட்டினோம், நாங்கள் எதிர்பார்த்தது 75000 ரூபாய் வரை சேரும் என, ஆனால் 4,00,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேர்த்து நல்ல உள்ளங்கள் மூலம் மனிதம் வாழ்கிறது என நிரூபித்தனர்.
சனி காலை பெங்கலூரிலிருந்து புறப்பட்டு கடலூரை சென்றடைந்தோம், நாங்கள் எதிர்பார்த்ததை விட நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. பல இடங்களை வெள்ளம் அடித்துச் சென்றிருந்தது. பல கிராமங்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. மழை மட்டும் விடாமல் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது.
மிகவும் பாதித்த பகுதிகள் சிலவற்றை தேர்ந்தெடுத்து அவற்றிக்கு முதலில் நிவாரணம் வழங்கலாம் என முடிவு செய்தோம்.
போகும் இடங்களில் ஆளுங்கட்சியினர் வாகனங்களை மறித்து அதில் ஜெயலலிதாவின் புகைப்படம் ஓட்டுகின்றனர் என்ற தகவல் வந்துகொண்டே இருந்தது. அதெப்படி வெள்ள சேத பகுதிகளை நேரில் பார்வையிடவில்லை, ஒரு ஆறுதல் செய்தி இல்லை, ஓட்டு கேட்க வீட்டுக்குள் வரை வந்த தொண்டர்கள் கூட்டம் எங்கே? வெட்கமில்லாமல் இதற்கு மட்டும் எப்படி முன்வருகிறார்கள்? ஆத்திரங்கள் அனைத்தையும் காட்டும் நேரம் இதுவல்ல இப்போது தேவை அணைத்து பொருட்களும் மக்களை சேர வேண்டும்.
‪#‎அழகப்பாசமுத்திரம்‬ என்ற இடம் பல தொடர்புகளிலிருந்தும் துண்டிக்கப்பட்டிருந்தது, அங்கு சென்று மக்களிடம் நேரடியாக கொடுக்க முடிவெடுத்தோம். வழிநெடுங்கிலும் பார்க்குமிடமெல்லாம் தண்ணீர் வெள்ளம். எப்படியோ இடத்தை சென்றைந்து விநியோகிக்க ஆரம்பித்தோம் மாற்று உடை, உணவு, போர்வை என எதுவுமே இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஏதோ கிடைத்த மகிழ்ச்சி கண்களில் தெரிந்தது.
பகுதி பொருட்களை அங்கே விநியோகித்து பின்பு அண்ணன் சத்தியாவின் Sathiya Narayanan நண்பன் மற்றும் ஆசிரியர் கார்த்திக் ஒரு மாணவர் கூட்டத்தை தயார் நிலையில் வைத்திருந்தார். எனவே பகுதி பொருட்கள் அவர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டது.
சமூக வலைத்தளங்கள் என்ற மிகப்பெரிய ஊடகம், அதில் ட்விட்டர் எனக்கு எப்போவுமே சரியான பாதையை தான் காட்டியிருக்கிறது. இப்போதும் என் ட்விட்டர் நண்பர்கள் எனக்கு பல வழிகளில் உதவினர்.
பல நல்ல உள்ளங்கள், உதவிக்கரங்கள் ஆம் இன்னும் மனிதம் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறது.

Sunday, August 16, 2015

ஓர் அழகிய மரணம்:



கோல் உயரக் குடி உயரும் - பழமொழி, ஆனால் தற்போது குடி உயர கொலை உயருகிறது.

சோகத்திற்கு சரக்கு, சந்தோசத்திற்கு சரக்கு, பிரிவுக்கு சரக்கு, சேர்க்கைக்கு சரக்கு, இன்னபிற எல்லாத்துக்கும் சரக்கு நம் வாழ்வில் அன்றாட ஒன்றாக மாறிய சரக்கு என்னும் உற்சாக பானம். கூச்சமுடன் வளைந்து நெளிந்து தலையில் துண்டு போட்டு, புதுப்பெண் போல அங்கும் இங்கும் நோட்டமிட்டு சாராயக் கடையில் சரக்கு வாங்கியவர்கள் இன்று ஒரு பரபரப்பான தெருவில் 5 ஸ்பீக்கர் கொண்ட பிரம்மாண்ட கருநிற பெட்டியிலிருந்து கற்பூர நாயகியே கனகவள்ளி பாடல் அதிர ஒலித்து இதயத் துடிப்பை உணரச்செய்துகொண்டிருக்க அருகிலிருக்கும் பச்சை வண்ண பதாகைக் கொண்ட வைன் ஷாப்பில் செந்நிற பானத்தை எளிதாக வாங்க முடிகிறது.
அண்ணா விஸ்கில என்ன இருக்கு?
அண்டிகுவிட்டி, ராயல் சாலன்ச் ......
பிராண்டில?
மேக்டலநேல்ஸ், மார்பியஸ், மன்சன் ஹவுஸ்....
டேய் மச்சி என்னடா? எனக்கு கொழப்பமா இருக்கு டா.....
தம்பி சீக்கிரமா சொல்லுங்க நிறைய பேர் நிக்குறாங்க....
அண்ணா ஒரே நிமிஷம் இருணா......
டேய் சீக்கிரமா சொல்லு டா பண்ணி....
மச்சி RC ரண்டு புல் சொல்லுடா, ஒரு 6 பீர் சொல்லுடா பிச்சகாரனுங்க கண்டிப்பா கூலிங் தரமாடனுங்க நாம இப்பவே நம்ம அண்ணாச்சி கடைல குடுத்துரலாம்......
எவ்ளோ ண்ணா ஆச்சு?

2340 தம்பி....

நாசமா தாண்டா போவீங்க (முனுமுனுப்புடன்) இந்தாங்க....
குடித்து அழிப்பது இவன் விற்பவனை நாசமாக போகச் சொல்கிறான். இது அநேகமாக ஒரு மாத இறுதியின் அத்யாவசிய பழக்கங்களுள் ஒன்றிவிட்டது. இது ஒருபுறம் என்றால் கணவனும் மனைவியும் சிறிது ஆடம்பர மால்களில் இருக்கும் மதுலோக்ஹா, எலைட் பார்களில் இருவரும் சேர்ந்தே வாங்கும் மார்டன் பழக்கம். வட இந்தியாவிலிருந்து தொற்றுன்னியாக பரவிவரும் இன்னொரு காய்ச்சல்.

நாம் ஏன் இந்த கலாசார விவாதத்திற்கு வந்தோம் .....எங்கோ ஆரம்பித்து எங்கோ பொய் விட்டோம்..சரி நம்ம பசங்க கிட்ட வருவோம்.
விரைகிறது நேராக சைடிஸ் கடைக்கு நமக்கெனவே உண்டாக்கிய HOT Chips கடைகள், வாங்கிய பாட்டில்கள் கிளிங் கிளிங் என பைகளில் சத்தமெழுப்பிக்கொண்டிருக்க,
அண்ணா முறுக்கு பாக்கெட், மிச்சர் பாக்கெட்
மச்சி எனக்கு அப்படியே ஒரு ஸ்வீட் பாக்கெட் டா.....
போய்த்தொல ..... அண்ணா அப்படியே ஒரு ஸ்வீட் பாக்கெட்....

மச்சி அப்படியே அவங்க நாலு பேருக்கும் போன் பண்ணி வரச்சொல்லு டா......

பொத்தான்களில்லாத அந்த செங்கலில் இருந்து நால்வருக்கும் அழைப்பு விடுத்து நேரம் மேம்படுத்தியாயிற்று. அந்நால்வரில் ஒருவர் தான் இக்கதையின் நாயகன் ஆதவன். திருமணமாகி 4 வருடங்களாகிருது ஒரு கைக்குழந்தை மற்றுமொரு இரு வயது நடைப்பழகிய குழந்தை. அழகான குடும்பம் ஆசைக்கு ஒரு பொண்ணு, ஆஸ்திக்கு ஒரு பையன் வாழ்வின் அழகான தருனங்களுடன் மனைவியிடம் செலவிட வேண்டிய கணங்கள் அவை. ஒரு தனியார் கம்பனியில் வேலை 9 - 5 ஆம் அடே மேனேஜரின் உத்யோகம் தான் ஆனால் மேனேஜெர் வேலை அல்ல. மாநிறம் தான் அனால் அழகி மைத்திரை . கொடியிடை என்ற ஆயுதத்தின் மூலம் சிறை பிடித்தவள் ஆதவனை.
திருமணத்தின் பின் காதலிக்க தொடங்கினர், ஓர் அற்புத அன்யோன்யம் பரவ தொடங்கியிருந்த வேலையில் தலைவனிடம் இருக்கும் அக்குடி பழக்கத்தை கண்டறிகிறாள். சிறிய சலனத்துடன் முதல் சண்டை ஒரு வாரம் நீடித்தத. ஒரு சத்தியத்தின் பின்னான அரவணைப்பில் கரைந்தது அச்சண்டை. நாட்கள் நீண்டன இதோ இன்று வரை.
பாப்பு(மைத்திரை) நான் 9 மணிக்கு வந்துருவேண்டி, சாப்பாடு வேணா....இங்க ஒரு ப்ரெண்டோட பர்த்டே அங்கேயே சாப்பாடு. நீயும் தம்பியும் சாப்டுங்க....
எனக்கு எதுனா வாங்கிட்டு வாங்க...
எனக்கு ஸ்வீட் சாப்டனும் போல இருக்கு...
சரி டி வாங்கிட்டு வரேன்.... வேற என்ன வேணும் என் தங்கத்துக்கு...
தங்கம்தான்..
லூசு.....லூசு....
ஏன் வாங்கித்தரமாடீங்களா?
உனக்கு இல்லாடதா டி...
ஆமா பேச்சு ஒன்னு தான்...
அம்மணிக்கு என்ன செய்யணுமாம்?
..........
ஏய்?
.........
பாப்பா அழுவுறா....நா வைக்குறேன் ...சீக்கிரமா வந்துடுங்க....
சரி டி...

விரைந்தான் ஆதவன் ஸ்பாட்டுக்கு...ஏற்கனவே பீரில் ஆரம்பமாயிருண்டது கச்சேரி....
இதோ வந்துட்டாருடா ஆபீசர்.....வாங்க ஆபீசர்....
மச்சி இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் போகணும் டா எனக்கு ஒரு கட்டிங் மட்டும் போதும் டா..
சரி நீ அப்படியே கெளம்பிடு...
புரிஞ்சிகொங்கடா ப்ளீஸ்...
சரி வா டா ரொம்ப சீன் போடாத....ஒரு கட்டிங் போடு....
கிளாஸ் நிரம்பியது....1..........2.................3............................4.......................................... 5...............................................#$#&%$*$(%^&*%#@!%^$#+"?. செவ்வாய் கிரகத்திற்கு மிக அருகில் இருக்கிறார்கள் அனைவரும். மணி ஒலித்தது....அலறி பொய் எடுத்தான் போனை....
பாப்பாப்பா கெளள்ம்பிட்டேன் டா இந்தோ வந்துர்ர்றேன்...
குடிச்சுரிக்கியா?????
இல்ல்ல்ல்லையே ....நான் புய் கூடிப்பனாஅஆ
எப்படியோ பொய்த் தொல....
சிறிது நேர மௌனத்திருக்கு பின்
மச்சிசி நான் கெளள்ம்புறேன் டா ....
பாத்து போ டா.....
கலவர முகத்துடன் கிளம்பினான்...சீறிப்பாய்ந்தது பைக்...திடீரென ஒரு ஆட்டோ குறுக்கே வந்தது..
ஏய்... ஏய்.... ஏய்
சுதாரித்து இடப்புறம் திருப்பி சீறாக வண்டியை திருப்பி சமாளித்துவிட்டான் பெருமூச்சுடன்...எதிரே வந்த காரை பார்க்காமல்.
..டிச்ஷ் ....கீரீச் .....டிச்ஷ் டின்ங்க் .....
ஏ வாங்கப்பா யாரோ கீழ உழுந்துட்டான் பா....ஒரே நாத்தம் குடிச்சுருகான் டா..கருமம் ...
வாழையிலையில் சுத்தப்பட்டிருந்த அல்வா மண்ணோடு கலந்து சிதரியிருந்ததை அரைக்கண்ணால் பார்த்தான்...என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன் பாடல் அழைப்பேசியில் எங்கோ தூரத்தில் ஒலித்து அடங்கியது.......................
</div>

Friday, May 8, 2015

என் அம்மாவிற்காக

முதல் நினைவு


 எங்கோ தூரத்தில் கேட்கிறது அக்குரல், எனக்கு முத்தமிட்டு தலைக்கோதி சீலைத்தொட்டிலில்(யாணை என்னும் பேச்சு வழக்கு உள்ளது) இட்டுச்சென்ற அந்த பாவியின் குரல். வெகு தொலைவில், பத்தடி தூரம் உள்ள பக்கத்து வீட்டிற்கு சென்றுவிட்டாள் . வெறுமை சூழ்ந்த சில கணம், எப்படி அழைப்பது அவளை? பேச்சும் வராது, வெறும் ங்ஙே மொழி மட்டும்தான். எவ்வளவு மாத்திரை கொண்டு ஒலிக்க வேண்டும் இச்சொல்லை, அவளுக்கு கேட்குமாறு இந்த "ங்ஙே"வை.

வார்த்தை வெளிவரும் முன் தாரைத்தாரையாய் கண்ணீர் மட்டும் வழிந்து சீலையின் ஒரு பக்கத்தை நனைத்துக் கொண்டிருக்கிறது. அதென்ன இதழோரம் ஒரு ஜோனை வழிகிறது, அது வாய்க்கு கண்ணீர் போலும்.

யுகமே கடந்துவிட்டது எங்கே போனாள்? ஆ! ஏதோ ஓர் அதிர்வு தெரிகிறது. "அச்சச்சோ ஏண்டா அழுவுற, அம்மா இங்கதாண்டா இருக்கேன்" அள்ளி எடுத்து இடுப்பில் அமர்த்தி சீலையில் முகம் துடைத்தாள். முதலில் கண்ணில் வழிந்ததை, பிறகு வாயில் வழிந்ததை "ஜொள்ளு பையா" என்று.

இதுதான் என்னுடைய முதல் நினைவு, கிட்டத்தட்ட 1 1/2 வயதிருக்கலாம். அவளிடம் பலமுறை இதைச் சொல்லிவிட்டேன், ஆனால் அம்மாவிற்கு நினைவில்லை.

 எனக்கென்னவோ இவ்வொரு நினைவுதான், ஆனால் வாழும் ஒவ்வோர் கணமும் வரமென கருதும் அவளுக்கு நினைவில் கொள்ள ஒன்றா, இரண்டா? மறந்திருப்பாள் போலும் என் அம்மா.

Tuesday, May 5, 2015

யார் பத்திரிக்கையாளன்?

#‎GobackIndianMedia‬ a viral tag created by people around world which is trending for a couple of days. http://t.co/UcREHJDeoo
இந்திய பத்திரிக்கையாளர்கள் நேபாளத்தில் நடந்த நிலநடுக்க காட்சிகளை உடனுக்குடன் ஒளிபரப்பினார்களே? பின் எதற்கு இது போன்ற டேக் உருவாக்கி கழுவி ஊத்தினார்கள்?
ஒரு குழந்தை அடிப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடக்கும் போது அதை காப்பாற்றத்தான் முனைவர் அனைவரும் ஆனால் இந்த ஞானசூனீயங்கள் அதை புகைப்படம் பிடித்து "Live telecast from Nepal with Raw bloods and lives". கோபம் வருமா வராதா?

அதனால்தான் இந்த டேக் உருவாக்கி சாணியில் முங்கிய செருபால் அடித்துள்ளார் நேபால நண்பர் ஒருவர்.
வெரும் TRP Rating காக ஊடகம் நடத்தும் சில மாப்பியா குப்பல்களுக்கிடையே பின்வரும் பத்திரிக்கைகளும் பத்திரிக்கையாளர்களும் இந்தியாவில் இருந்தனர்.
Bengal Gazette by Hicky
Kesari by Lokmanya Bal Gangadhar Tilak
Amar Ujala
Dainik Jagran
The deccan chronicle by Tikkavarapu Chandrashekar Reddy
The Free Press Journal by Swaminathan Sadanand
O Heraldo by Prof. Messias Gomes and Luís de Menezes Bragança
The Pioneer by.George Allen, Rudyard Kipling
The Assam Tribune
The Hitavada (The People's Paper) by Gopal Krishna Gokhale
The Hindu as the Triplicane Sixconsisting of 4 law students and 2 teachers
The times of india - Sahu Jain family
Deepika by Syrian Catholic priest
Kerala Kaumudi by C. V. Kunhiraman with K. Sukumaran B.A.
Malayala Manorama by Kandathil Varghese Mappillai
Tamil Murasu (தமிழ் முரசு) a Singapore based Tamil language newspaper by Thamizhavel G. Sarangapani
The New Indian Express and DinaMani by P. Varadarajulu Naidu.
இவர்களும் பத்திரிக்கையாளர்கள் தான், சில கொள்கைகளுக்காக பத்திரிக்கை நடத்தியவர்கள், நிழலுலகை வெளிச்சமிட்டு காட்டியவர்கள். ஆனால் இன்றோ குரங்கு கையில் கிடைத்த பூமாலைப் போல் கையில் கேமெரா உள்ளவனெல்லாம் பத்திரிக்கையாளன். இதில் வாகனத்தின் பின்புறம் கொட்டை எழுத்தில் PRESS வேறு.
திருந்துங்கள்.
நீங்கள் சொல்வதுதான் வேதவாக்கு என்று சில பாமர ஜீவன்களும் வாழ்கின்றன, அவர்களுக்காவது நல்ல செய்தியை வழங்குங்கள்.
Once again Shame on you Indian media ‪#‎ShameonYouIndianMedia‬

Tuesday, August 5, 2014

Man Power Consultancy

சமீபத்தில் நான் கண்ட அதிர்ச்சி Man power Consultancy மூலம் குழந்தை வளர்ப்பு. பெரும்பாலும் சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வேகமாக பரவி வரும் ஆபத்தான கலாச்சாரங்களுள் ஒன்று. யார் இந்த Man power Consultancyக்கள் என்று சற்று ஆராய்ந்து பார்த்தால் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. பெரும்பாலும் இவர்கள் குறி வைப்பது என்னவோ பணம் மட்டுமே வாழ்க்கை என, ஓயாது எதற்காக சம்பாதிக்கிறோம் என தெரியாமல் இரவும் பகலும் உழைக்கும் I.T ஆடுகளயும், வீட்டில் இருவருமே வேலைக்கு போகும் நிலையில் உள்ளவர்களையும் தான். குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே பெண்கள் மீண்டும் வேலைக்கு சென்றுவிடுகின்றனர், கேட்டால் அனைவரும் கூறும் ஒரே காரணம் "வாழ்க்கையை ஓட்டணும், வீடு வாங்கி செட்டில் ஆகனும்" இதுதான். எனவே குழந்தை வளர்ப்பு பற்றிய ஒரு சிறு அலசல்.

தாயிடம் வளரும் குழந்தை:
இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினமும் இவ்வுலகை அறிந்துகொள்ள, இயற்கை அறிவை பெற அவரவர் தத்தம் தாயிடமிருந்தே பெறும் வண்ணம் படைக்ககப்பட்டுள்ளன. புலியின் வேட்டையாடும் திறன் அதன் தாயிடம் இருந்து தான் பயிற்றுவிக்கப்படுகிறது, அதே புலி வேறு தாயிடம் வளர்ந்தால் இத்திறணை பெற்றிறாது. முதலை, திமிங்கலம், பனிக்கரடி, பென்குயின், கழுகு என நிலம் நீர் ஆகாயம் மார்கமாக வாழும் அனைத்து உயிறிகளுக்கும் இது பொருந்தும். இவ்வகையிலே மனிதனும் படைக்கப்பட்டிருக்கிறான். ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து தவழப்பழகி, நடக்கப்பழகி, பேசப்பழகும் வரை ஒவ்வொரு நொடியும் நம் வாழ்வில் ரசிக்க வேண்டிய அழகான தருணங்கள். இதன் வாயிலாக கிடைக்கும் மகிழ்ச்சியே அலாதி தான். இதை கவிஞர் தாமரை 'கண்கள் நீயே' பாடல் வரிகளில் அழகாக கூறியிருப்பார், அதன் வரிகளின் உச்சம் 'கடல் ஐயிந்தாறு மலை ஐயிநூறு
இவை தாண்டி தானே பெற்றேன் உன்னை, உடல் செவ்வாது பிணி ஒவ்வாதுபல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை' என தன் மகன் மீதுள்ள பாசத்தை கொட்டி தீர்த்திருப்பார். உடன் இருந்து இது என்ன, அது என்ன, அது எப்படி, ஏன், எதற்கு என தன் பிள்ளை கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதில் அல்லவா அனைத்து சந்தோஷமும் ஒளிந்துள்ளது.
இப்படி அனு அனுவாக உடனிருந்து ரசிக்க வேண்டிய மழலை பருவத்தை பணம் சம்பாதிப்பதற்காக தாரைவார்த்துக் கொண்டிருக்கிறது இன்றைய சமுதாயம்.

பாட்டி/தாத்தாவிடம் வளரும் குழந்தை:
இன்னும் சிலர் தன் ஊரிலிருக்கும் அம்மா, அப்பாவை கூட்டிவந்து தங்கள் குழந்தைகளுக்கு பணிவிடை செய்ய வைக்கின்றனர், தங்கள் அலுவலக வேலைகளை முடித்து வரும் வரை இப்பெரியோர்களுக்கு பணியாள் வேலை தான். பாசத்திற்கு ஏங்கியதுதானே முதுமை, மனப்பூர்வமாக வேலையை ஏற்றுக்கொள்கின்றனர். தன் பேரன்/பேத்தி பள்ளி செல்லும் வரை காலத்தை இங்கேயே கழித்துவிடுகின்றனர்.
இவர்களால் வளர்க்கப்படும் பிள்ளைகள் தாயிடம் வளர்க்கப்படும் பிள்ளைகளை போல உலக அறிவை பெற்றிருப்பது ஆச்சரியம் இல்லை.

Baby Sitter எனப்படும் வாடகைத் தாய்:
தாயின் அரவனைப்பில் வளரும் குழந்தைக்கு உலக அறிவு ஊட்டப்படுகிறது, Baby sitter எனப்படும் வாடகை தாய்களுக்கு அது பற்றி எல்லாம் கவலை இல்லை. தாயைப் போல அரவணைத்து கவனித்துக்கொள்ளமாட்டார்கள். அவர்களது வேலை சோறூட்டுவது, குளிக்க வைப்பது, துணிமாட்டி விடுவதுடன் முடிந்து விடுகிறது. இச்சூழலில் வளரும் குழந்தை அனாதை ஆசிரமத்தில் வளரும் குழந்தை போலவே பாசத்திற்கும் உறவுக்கும் ஏங்கி போவதே நிதர்சனம். குழந்தை சாப்பிடுகிறதா என அறிந்துகொள்வதை விட ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுகிறதா என அறிவதே அவசியம். குழந்தையின் முதல் மூன்று வருடங்கள் மிகவும் கவனிப்புடன் வளர்க்க வேண்டிய பருவங்கள்.
சில நேரங்களில் குழந்தை எதற்காக அழுகிறது என தெரியாமல் எதையோ செய்யும் ஆட்களும் உள்ளனர். "வெள்ளிக்கிழமை ஆனா குழந்தை நெற்றியில் ஏதோ தடவி, எலுமிச்சையை நான்காக அறுத்து தன்னுடன் எடுத்துகொண்டு சென்றுவிட்டார், அன்றிலிருந்து வேலையிலிருந்து நீக்கிவிட்டேன்" என புலம்பிய தாயையும் கண்கூடாக பார்த்திருக்கிறேன்.
இந்த consultancy கள் அனுப்பி வைக்கும் ஆட்களின் பின்புலம், அவர்களின் வரலாறு எதையும் பெற்றோர்கள் தெரிந்துகொள்வதில்லை, அவர்களிடமும் கேட்பதில்ல. சில பெற்றோர்களின் கேள்விகளுக்கு "நம்பிக்கையின் பெயரில் அனுப்பி வைக்கிறோம்” என மழுப்பிவிடுகின்றன இந்த consultancy கள். இவ்வாறு பின்புலம் தெரியாத மனிதர்கள் சில வீடுகளில் தங்கியிருந்து திருடிச் சென்றுவிடுவதும் உண்டு.
நாகரீகம் அறிய, நாட்டுநடப்பு அறிய பெண்கள் வேலைக்கு போவது அவசியம். ஆனால் பணத்தாசையில் குழந்தை பிறந்த 5 மாதத்தில் வேலைக்கு சென்ற பெண்மணிகளும் உள்ளனர். தாய்ப்பால் கொடுத்தால்
முலை பெருத்துவிடும் என்னும் எண்ணம் பரவலாக பரவி இருப்பதால், அதை புறக்கணித்து மாட்டுப்பால் கொடுக்கும் சில பெண்மணிகளும் உளர். நாம் கற்ற அனைத்தியும் நம் சந்ததிகளுக்கு கற்றுக்கொடுக்கும் கடமை நமக்குள்ளது.
5 வயதுக்குள் கற்கும் நாகரீகமே பசுமரத்தாணி போல் பதியும். இந்த குழந்தை பருவத்தை எவருக்கும் தாரைவார்க்காமல் நம் குழந்தையை நாமே வளர்ப்பது நமக்கும் நல்லது, நம் குழந்தையின் எதிர்காலத்திற்கும் நல்லது.